முருகன் - இறைவன்
சூரன் - ஆணவம்
சம்ஹாரம் - அழிவு
“நான்” என்ற ஆணவம் தான் சூரன்
"நான் பிரம்மம்" என்ற ஞானமே முருகன்
ஆத்மா தன் இருப்பை உணரும் உணர்வு நான் என்று வெளிப்படும். (அது பெரிய நான்) அந்த நான் பிரம்மத்திலிருந்து விடுபட்டு தன்னை ஒரு ஜீவனாக நினைத்துக் கொள்வதே ஆணவம் (சிறிய நான்). அந்த ஜீவ அகந்தையின், அறியாமையின், விருப்பு வெறுப்புகளில் இருந்து பாவ-புண்ணிய பதிவுகள் சேர்கின்றன.
மனித உடலில் இருந்தாலும், " உலகனைத்தின் பிரம்மம் நான் " என்று உணர்தலே சூர சம்ஹாரம். (ஆணவத்தின் அழிவு)
சூரனை முருகன் கொன்றான் என்பது வரலாறு. ஆனால் உண்மையில் அது கொலை அல்ல. சூரன், ஒவ்வொரு தலையோடும் முருகனோடு மோதி மோதி, திரண்டு நிற்கும் முருகனின் அதிர்வுகளை மறைமுகமாக பெற்று, தீட்சையை உள்வாங்கி, இறுதியில் பிளவுபட்டு சேவலும் மயிலுமாக முருகத்துவம் பெறுகிறான்.
முருகன் சூரனை கொல்லவில்லை. சேவலும் மயிலுமாக, முருக வாகனமாக, கொடியாக ஆக்கினார்.
சூரனின் நான் என்ற ஜீவ-அகந்தையை அழித்து, தன்னுடைய அம்சத்தை கொடுத்தார். அதனால் அவன் தனி இருப்பு மறைந்து, பிரபஞ்ச இயக்கத்தின் ஒரு பாகமாக ஆனான். பிரம்மத்தின் வடிவம் ஆனான்.
ஞானிகள் எல்லோரும், அவர்களுக்குள் சூரசம்ஹாரம் நிகழ்ந்து, சேவலும் மயிலுமாக வாழ்பவர்கள்தான். அவர்கள் தனிப்பட்ட மனிதனாக இல்லாமல், இறைவனை சுமக்கும் வாகனமாக, இறைவனை பாடும் கொடியாக இருப்பவர்கள்தான்.
ஒவ்வொரு மனிதனும், உயிர்-உடல் என்ற இரண்டின் கூட்டணி.
அல்லது தந்தையின் வித்து - தாயின் நாதம் என்ற இரண்டின் கலப்பு.
நாதம் - சேவல்
வித்து - மயில்
வித்து நாத கலவையாக,
தன்னை ஒரு ஜீவனாக பாவித்து, மாயையில் மயங்கி இருந்த சூரபத்மனை, ஞானம் என்ற வேல் இரண்டாக பிளந்தது.
நாதம் சேவலாக முருகன் புகழ் பாடியது. வித்து மயிலாக இறைவனை சுமந்தது. மனிதன் தெய்வத்தின் குரலாகவும், தெய்வீகத்தை சுமப்பவனாகவும் வாழ செய்வதே சூரசம்ஹாரம்.
வெளிப்படையாக பார்க்கும்போது, வேல் என்பது கொலைக்கருவியாக இருக்கிறது. ஆனால் அது ஞானத்தின் சின்னம். ஞானத்தின் ஸ்தூல அடையாள பொருள் தான் வேல்.
அறிவு - கூர்மையானது, பரந்தது(அகன்றது), ஆழமானது. இது அறிவின் தன்மை. வேலுடைய அமைப்பும் இப்படி தான் இருக்கிறது. அதன் நுனி பகுதி கூர்மை, மையப்பகுதி அகலம், கைப்பிடி பாதம் வரை வரும் நீளம்(ஆழம்) .
இறைவனை, "ஆழ்ந்து அகன்ற நுண்ணியனே" என்று சிவபுராணம் கூறுகிறது. ஆக இறைவன், அறிவு, வேல் மூன்றின் இலக்கணமும் ஒன்றே.
No comments:
Post a Comment