Friday, August 23, 2024

Kundalini secrets

 சித்தர்கள் சொன்ன குண்டலினி சக்தி பற்றிய அபூர்வ குறிப்புகள்:-


(பல அபூர்வ  யோக நூல்களில் இருந்து தொகுக்கப்பட்ட குண்டலினி சக்தி பற்றிய உண்மை  ரகசியங்களை நம் சித்தர்களின் குரல் அன்பர்களுக்காக முழுமையாக இன்று  பதிவிடுகிறேன். அவசியம் படித்து உணர்ந்து கொள்ளுங்கள்.)


குண்டலினி என நமது சித்தர்களால் வழங்கப்பட்ட  இந்த பொருளுக்கு பல்வேறு பரி பாசை  பெயர்கள் உண்டு. அவற்றுள் சிலவற்றை  காண்போம்.


-திருவடி, வன்னி, வாலை, வாசி, அகர

உகரங்கள், லிங்கம், மயிர் பாலம்,

 வெட்டாத சக்கரம், திருவாடுதுறை, புருவநடு, இரவு பகல் அற்ற இடம், இரவு பகல் தோன்றும்  இடம், சிற்சபை, ஓம், மூலாதாரம், மூல  துவாரம், துவாரகை, ஹரி துவார், ஈசன் நுழை  வாசல் இன்னும் பல பெயர்கள். ஞாபகத்திற்கு வந்தவை இவை.


நன்றாக கவனித்து பார்த்தீர்களானால்

 ஒவ்வொரு பெயரும் மிக்க அர்த்தத்தை

கொண்டுள்ளவை. ஒவ்வொன்றாக என்னால் முடிந்த வரை சித்தர்களின் பார்வையில் எதை கண்டேன் என்பதை மட்டும் இன்று  இந்த கட்டுரை சொல்லும்.


அகத்தியரின் "துறை அறி விளக்கம்" என்ற நூல்  பழங்காலமாக ஞானாசிரியர்களின் கைகளில்  மட்டும் தவழ்ந்து கொண்டு இருந்தது. இன்னுமே அது ரகசியமாக தான் உள்ளது. இந்த  நூலில் சுமார் 100 பாடல்களுக்கு மேல் உள்ளது. இவை முழுக்க முழுக்க குண்டலினி பற்றி மட்டுமே பாடக்கூடியவை. அதில் இருந்து ஒரு பாடல். கைவசம் மூல நூல் இல்லாததால் ஞாபகத்திற்கு வந்த வரிகள்  இங்கே.


"யாரும் அறிவார்கள் ஒன்பது வாசல் யாரும்

அறியார்கள் ஓர் வாசல்

அது கடையோர முன்வாசல்......"

".....மூல முதல் ஆறு தளம் கீழே தள்ளி

முதிர்ந்து நின்ற மேல் ஆறு தளத்தை

நோக்கி...."


நாம் அனைவரும் ஆறு ஆதாரங்கள் உள்ளன என்பதை அறிவோம். அவை மூலம் முதல் துரியம் வரையாக உள்ளது. ஆனால் நம் உடம்பில் 12 ஆதாரங்கள் உள்ளன என்பதை அறிவீர்களா?

              மேல் உள்ள பாடலில் "முதிர்ந்து நின்ற மேல்ஆறு தளத்தை நோக்கி" என்ற வரி குறிப்பது அதுவே. பரஞ்சோதி மகான்  அவர்களின் "நான் கடவுள்" என்ற புத்தகத்தில் மூளையை சுற்றி  ஆறு உறைகள் உள்ளதாகவும் அவையே மேல்  ஆறு ஆதாரங்கள் என்றும் அவற்றின் மீதே முழுக்க முழுக்க தவம் செய்ய வேண்டும் என  கூறுகிறார். அவரின் பயிற்சி முறைகளில் மூலாதாரம், ஆக்ஞை மட்டுமே உள்ளது. மற்றும் இடைப்பட்ட ஆதாரங்கள் தவ பயிற்சி கிடையாது.


மேலே உள்ள அகத்தியர் பாடலில்

"முதிர்ந்து நின்ற மேல் ஆறு தளத்தை நோக்கி"

          என கூறுவதும் இதை பற்றி தான்.


மேலும் சில பெயர்கள்:-

            ஊசி முனை வாசல், நெற்றிக்கண், முப்பு, நடராஜர், திருசிற்றம்பலம்,

சுழுமுனை , கரிமுகன்.

              சரி, நல்லது, இவ்வளவு பெயர்களை தெரிந்து கொள்வதால் என்ன பயன்?


இந்த ஐயம்  உங்களுக்கு எழலாம். உண்மை தான். ஆயினும் "கற்றது கைம்மண்" என்பதால் நான் அறிந்து  கொண்ட பல பொருள்களை பரிமாற்றம் கொள்ள ஒரு வாய்ப்பு. இந்த கேள்விக்கான பதிலை இந்த தொடரின் இறுதியில் தெரிந்து கொள்வீர்கள்.


நண்பர்களே, சித்தர்களின் குரலில் இன்றைய பதிவில்  நான் அவ்வையின் ஞான குறள், விநாயகர் அகவல்,

சிவ வாக்கியர் பாடல்கள், அகத்தியர் பாடல்கள், குடம்பை சித்தர், பட்டினத்தார் பாடல்கள், திருமந்திரம், திருஅருட்பா, திருக்குறள், ஞானரத்தின குறவஞ்சி மற்றும் பல நூல்களில் இருந்து குண்டலினி  பற்றிய செய்திகளை கொடுக்க முயல்கிறேன். பல உண்மைகளையும் தகவல்களையும் உணர்ந்து கொள்வீர்கள். நான் இங்கு மேற்கோளாக  கொடுக்க இருப்பது நம் தமிழகத்தில் மிக சிறப்பான இடத்தை பெற்றுள்ள சித்தர்களின் பாடல்களை மட்டுமே.....


நமது உடம்பில் சூரிய மண்டலம், சந்திர

மண்டலம், அக்னி மண்டலம் என மூன்று

 மண்டலங்கள் உள்ளன. இவை முறையே

பிங்கலை, இடகலை, சுழுமுனை ஆகிய நாடிகளால் குறிக்க படுகின்றன.


ஒளவையின் விநாயகர் அகவல் பாடலை பார்ப்போம்.....


"இடைபிங்கலையின் எழுத்து அறிவித்து

கடையிற் சுழுமுனை கபாலமும் காட்டி

மூன்று மண்டலத்தின் முட்டிய தூணின்

நான்றெழு பாம்பின் நாவில் உணர்த்தி..."


நமது ஆன்மிக பயணம் இந்த நாடிகளை சார்ந்தே அமைந்துள்ளன.


நமது உடம்பில் ஒன்பது வாயில்கள் உள்ளன என்பதை அறிவோம். எங்கெங்கெல்லாம் வாயில் உள்ளனவோ அங்கெல்லாம் வாயு செல்லும். 


நமது உடம்பில் ஈசன் நுழை வாயில் அல்லது ஊசி முனை வாசல் அல்லது  மூல துவாரம் என அழைக்க படக்கூடிய ஒருவாசல் உள்ளது. இந்த வாசலின் வழியாக பிராண வாயுவை கும்பகம் ரேசகம் என பயிற்சி செய்வதையே பிரணாயாம பயிற்சி என நம்  முன்னோர்கள் கொடுத்தார்கள்.


மூக்கின் வழியாக மூச்சை இழுத்தி நிறுத்தி

பின் விடுவது அல்ல இந்த பயிற்சி. இந்த பயிற்சி மூல வாயிலின் வழியாக செய்ய வேண்டியது. நமது உடம்பில் எல்லா இயக்கங்களுமே பல வாயுக்களை அடிப்படியாக கொண்டது.


உணவை செரிக்க ஒரு வாயு, குரல் எழுப்புவது ஒரு வாயு . கழிவுகளை வெளியே தள்ளுவது அபான வாயு இன்னும் பல....

     தனஞ்சய வாயு என்ற வாயு ஒன்று உண்டு. உயிர் பிரியும் போது இந்த வாயு உடலை விட்டு வெளியேறுகிறது. இந்த வாயு உடலில் இருக்கும் வரை மட்டும் தான் உயிர் இந்த  உடம்பில் இருக்கும்.


இப்போது ஒளவைவையின் பாடலை பார்ப்போம்.....

        இறைவன் ஒளவைக்கு குருவாக வந்து தீக்ஷை  அளித்ததாக விநாயகர் அகவல் பாடல்கள் எழுத பட்டு இருக்கும்.


"இடைபிங்கலையின் எழுத்து அறிவித்து..."


இடை பிங்கலை என்ற நாடிகளை வலது இடது  சுவாச மூச்சு குழல்களை குறிப்பதாக இந்த உலகம் கூறுகிறது. அப்படியாயின் அதை  அறிவிக்க வேண்டிய அவசியம் இல்லை. மிக தெளிவாக தெரிந்த ஒரு விசயமாகி விடும்  இல்லையா? அதுவும் இறைவன் வந்து தான் காட்டுகிறானாம்.


"கடையிற் சுழுமுனை கபாலமும் காட்டி.."


"சுழுமுனை கடையில் கபாலமும் காட்டி"

என இதை படிக்க வேண்டும். 

         கபாலம்   எல்லோருக்கும் தெரிந்த ஒன்று. அது என்ன சுழுமுனை கடையில் கபாலம் காட்டுவது?


நமது உலகிற்கு சூரியன், சந்திரன், அவற்றில்  இருந்து தோன்றும் அக்னி ஆகிய மூன்றும் மிக அடிப்படையானது. அவற்றிற்கு என்ன என்ன நிகழ்ச்சிகள் நடக்கிறது? உதயம், அஸ்தமனம், அமாவாசை, பௌர்ணமி, கிரகணம் ஆகிய

 நிகழ்ச்சிகள். அண்டத்தில் நடக்கும் இந்த

 நிகழ்ச்சிகளை பிண்டத்திலும் செயல்

 படுத்துவதே நாம் செய்ய கூடிய ஆன்மிக

 பயிற்சிகளின் நோக்கம்.


இட கலை = சந்திரன்

பிங்கலை = சூரியன்

அக்னி கலை = சுழுமுனை


இந்த மூன்று நாடிகளின் வழியாக அமாவாசை,  பௌர்ணமி, கிரகணம் ஆகியவற்றை உருவாக  வேண்டும்.


சரி எவ்வாறு உருவாக்குவது? 

         காற்றின்  மூலம். அதுவே "பிராணயாம பயிற்சி" என  முன்னோர்கள் கொடுத்துள்ளனர். இது இரு மூக்கு துளைகளின் வழியாக காற்றை இழுத்து

 நிறுத்தி வெளிவிட்டு செய்யும் பயிற்சி அல்ல.


"மூன்று மண்டலத்தின் முட்டிய தூணின்…"


மூன்று மண்டலம் என்பது சூரிய, சந்திர,

 அக்னி மண்டலங்களை குறிக்கிறது.

இந்த மூன்று மண்டலங்களை முட்டி நிற்கும் தூண் எது? 

       நான்றெழு பாம்பு என்கிறார் ஒளவை. பாம்பு என்பது குண்டலியை  குறிக்கும்.


இந்த பாடலில் இருந்து குண்டலி என்பது இட பிங்கலை சுழுமுனை நாடிகளுக்கு அருகிலும் ஊடுருவியும் இருப்பதாக புலப்படுகிறது.


நண்பர்களே, கீழ் வரும் பாடல்களை

கவனியுங்கள்.....


"ஈரைந்து வாசலில் மயங்கிய வாயுவை

ஈசன்தன் வாயிலில் ஏற்று"

                       - ஒளவை குறள்


"மூலத்து வாரத்து மூளு மொருவனை

மேலைத் துவாரத்து மேலுற நோக்கிமுற்

காலுற்றுக் காலனைக் காய்ந்தங் கியோகமாய்

ஞாலக் கடவூர் நலமா யிருந்ததே."

                       - திருமந்திரம்


"புறப்பட்டுப் புக்குத் திரிகின்ற வாயுவை

நெறிப்பட வுள்ளே நின் மலமாக்கி(நிர்மலமாக்கி)

லுறுப்புச் சிவக்கும் ரோமங்கறுக்கும்

புறப்பட்டுப் போகான் புரிசடையோனே."

                        - திருமந்திரம்


முதல் பாடல் ஈசன் வாயில், இரண்டாவது

பாடல் மூல துவாரம் என குறிக்கப்பட கூடிய

இந்த வாசலின் வழியாக பிராண வாயுவை

 ஏற்ற வேண்டும். 


சித்தர்கள் "கால்" என்ற வார்த்தையை காற்றை குறிக்க உபயோக படுத்தி இருப்பார்கள்.


இரண்டாவது பாடல் = "காலுற்ற..."

மேற்கண்ட பாடல்களிலிருந்து இட பிங்கலை,  சுழுமுனை நாடிகளின் வழியாக வாயுவைப் பொருந்தி பயிற்சிகள் செய்ய சொல்வதாக தெரிகிறது.


ஈரைந்து வாசலில்….


நன்றாக கவனியுங்கள். ஈரைந்து = இரு +

ஐந்து. = பத்து. அவ்வை பத்து வாயில்களை

சொல்கிறார். என்ன இது? ஒன்பது வாயில்

 தானே நமக்கு தெரியும்?


அது என்ன பத்தாவது வாயில்? 


அதுவே ஈசன்

 வாயில் அல்லது மூல துவாரம்.


சரி ஈசன் வாயிலில் எப்படி பிராண வாயுவை ஏற்றுவது?


"மன்மனம் எங்குண்டு வாயுவும் அங்குண்டு

மன்மனம் எங்கில்லை வாயுவும் அங்கில்லை"


நம் மனம் எங்கெங்கெல்லாம் பாய்கிறதோ

 அங்கெல்லாம் பிராண வாயு பாயும். எனவே  மனதாலே ஈசன் வாயிலை நினைத்தால் பிராண  வாயு ஏறும்.


இடைபிங்கலையின் எழுத்து அறிவித்து ...


நண்பர்களே, அதென்ன இட பிங்கலையின்

 எழுத்து?


நம் தாய் தமிழ் மொழியில்  ஒரு மிகப்பெரிய சிறப்பம்சம் உண்டு.

           அது என்ன வென்றால் மொழியின்

எழுத்துக்களிலே இறைவனை பற்றிய ரகசியங்களை விட்டு சென்ற மொழி தமிழ் மொழி மட்டும் தான். உயிர் எழுத்து, மெய் எழுத்து ஆகிய இரண்டு வகைகள் மட்டுமே பொதுவாக உண்டு. 


இவை இரண்டும்  ஒட்டாமல் தனி தனியாக உள்ளன. ஆனால் தமிழ்  மொழியில் உயிர்மெய் எழுத்துக்கள் உண்டு.


உயிரும் மெய்யும் ஒன்றோடொன்று கலந்து

இயங்குவதை எழுத்துக்களிலேயே விட்டு

 சென்று விட்டனர். அது மட்டுமா?


ஆயுத எழுத்து என சொல்ல கூடிய ஃ என்ற எழுத்து தமிழில் மட்டும் தான் உள்ளது.


நண்பர்களே, இந்த எழுத்து ஒரு உபயோகம்

 இல்லாத எழுத்து என எத்தனை பேர் நினைந்து இருப்பீர்கள்?

        நான் கூட ஆரம்பித்தில் அப்படி தான்

 நினைத்தேன். உடல், உயிர் ஆகியவற்றை

 பார்த்து விட்டோம்.

ஆனால் ஆன்மாவை காணோமே?


ஃ ஆன்மாவை குறிக்கிறது நண்பர்களே.

 அது உடலோடும் உயிரோடும் ஒட்டாது

தனியே இருக்கிறது. வள்ளலார் ஒரு பாடலில்  கூறுவார்.


"வானத்தில் மயில் ஆட கண்டேன். மயில்

குயில் ஆச்சுதடி அக்கச்சி மயில் குயில்

ஆச்சுதடி"


நாம் தவத்தில் மூல வாசலை திறந்து, ஆழ்ந்து  செல்ல செல்ல ஒளி, ஒலி அனுபவங்களை பெறுவோம். கோயிலில் என்ன நடக்கிறது?


கருவறை வாசல் பூசைக்கு முன் மூடி இருக்கிறது. வாசல் திறந்ததும் தீபம் காட்டுகிறார்கள். கூடவே மணியும் அடிக்கிறார்கள். 


பின் இறைவன் தரிசனம் கிடைக்கிறது. இதுவேதான் நம் தவத்திலும் நடக்கிறது.

இப்போது எழுத்துக்கு வருவோம்.


மேற்சொன்ன வள்ளலார் பாடலில் "அக்கச்சி"

          என்ற வார்த்தையை கூறி இருக்கிறார்.


"அக்கச்சி = அக் + ஆச்சி". (ஃ +ஆச்சி). அவர்

 அக் என சொன்னது இந்த ஆயுத எழுத்தை

 தான் நண்பர்களே.


சரி, இட பிங்கலைகளுக்கு எழுத்து இருக்கிறதா? அப்படியாயின் அவை எந்த எழுத்துக்கள்?


அ = பிங்கலை

உ = இடகலை

ம் = சுழுமுனை


இந்த மூன்றையும் தவத்தினாலே ஒன்றாக கலந்தால் அதுவே ஓம் ஆகிறது.


8-2 தத்துவம் என ஆன்மிகத்தில் உள்ளவர்கள்... தேடிக்கொண்டு இருக்கக்கூடிய ஒரு மிக ரகசியமான தத்துவம் இது.


தமிழில் ௮ -8 ௨ - 2 குறிக்கிறது.

ஒளவை தன் ஞான குறளில் கூறுவார்.


"கூறும் பொருள் இது அகர உகாரங்கள்

...மகரம் குழல் வழி ஓடிட.." என வரும்.

அது ஏன் கூறும் பொருள் என கூற

வேண்டும்?

குரு வானவர் இடகலையையும்

பிங்கலையையும் காட்டி கொடுக்க வேண்டும்.

இதையே தான் "இடைபிங்கலையின் எழுத்து அறிவித்து ..." விநாயகர் அகவலில்

கூறுகிறது.


"குரு வடிவாகி குவலயந்தன்னில்

திருவடி வைத்து..."

"கடையிற் சுழுமுனை கபாலமும் காட்டி.."

இதன் விளக்கம் பார்ப்போம்.


"எல்லா கலையும் இடை பிங்கலை நடுச்

 சொல்லா நடு நாடி யூடே தொடர் மூலஞ்

 செல்லா எழுப்பி சிரத்துடன் சேர்தலால்

நல்லோர் திருவடி நண்ணி நிற்போரே"


நடு நாடி = சுழுமுனை


சொல்லா நடு நாடி = ஆசான் மூலம் உணர

 வேண்டிய நாடி நண்பர்களே, நீங்கள் சரஸ்வதி படம் பார்த்து  இருப்பீர்கள்.


அவர் எதில் அமர்ந்து இருக்கிறார்?

           ஆயிரம் இதழ் தாமரை மலரில். தாமரை எவ்வாறு இருக்கிறது? நன்றாக மலர்ந்து விரிந்து இருக்கிறது.


சுழுமுனையின் இறுதி மலர் போன்ற மூளையில் முடிகிறது. ப்ரஹ்ம ரந்திரம் என்று சொல்ல கூடியது அது தான். நமது தற்போதைய மூளை மொட்டு போல சுருங்கி இருக்கிறது. நாம் இந்த நாடிகளின் வழியாக பிராண வாயுவை மேல் ஏற்ற மூளை மலராக விரிகிறது. அப்போது வெறும் ஹார்மோனை மட்டுமே சுரக்க கூடிய சுரப்பிகள் அமுதத்தை சுரக்க ஆரம்பிக்கும்.


சிவ பெருமானுடைய படத்தை பார்த்து இருப்பீர்கள். அவர் தலையில் பாம்பு இருக்கிறது. அது குண்டலினியை குறிக்கும்.


பிறை சந்திரன் இருக்கும்..  தலையில் இருந்து அமுத கங்கை வழிந்து  கொண்டு இருக்கும்.


நாம் மூன்று மண்டலங்களை பார்த்தோம்.


சூரிய மண்டலம், சந்திர மண்டலம் மற்றும் அக்னி மண்டலம். இந்த பிறை சந்திரன் சந்திர மண்டலத்தை குறிக்கிறது. 

பிறையாக இருக்க கூடிய இந்த சந்திரனை முழு மதியாக ஆக வேண்டும். எவ்வாறு?


மூன்று நாடிகளும் மூலாதாரத்தில் போய் முடிகிறது. பிராண வாயுவை இந்த நாடிகளின்  மூலம் ஏற்ற ஏற்ற அது மூலாதாரத்தில்  மூண்டு எழக்கூடிய மூலக்கனலை நன்றாக  கிளர்ந்து எரிய செய்யும்.


இந்த கனலின் வெப்பம் தாங்காது மூளை  மலராக விரியும். சந்திர மண்டலத்தில் இருக்க கூடிய அமுத கலை அமுதத்தை சுரக்க ஆரம்பிக்கும். அதை தான் சிவனின் தலையில் இருக்கும் கங்கை குறிக்கிறது.


மூல நெருப்பை இட்டு முட்டி நிலா மண்டபத்தில். பாலை இறுக்கி உண்டு பசி ஒழிவது  எக்காலம்?

             - பத்திரகிரியார்.


அவ்வை "அமுத நிலை" என்ற ஒரு வார்த்தையை உபோயோக படுத்தி இருப்பதை  கீழ்வரும் பாடலில் கவனியுங்கள்.....


குண்டலி அதனிற் கூடிய அசபை

விண்டு எழும் மந்திரம் வெளிப்பட உரைத்து

மூலாதாரத்தின் மூண்டெழு கனலை

காலால் எழுப்பும் கருத்து அறிவித்தே

அமுத நிலையும் ஆதித்தன் இயக்கமும்

குமுத சகாயன் குணத்தையும் கூறி.."


குமுத சகாயன் = குமுத மலரில் வசிக்க

 கூடிய இறைவன்.


நண்பர்களே, குமுத மலருக்கு ஒரு தனி சிறப்பு உண்டு. அது சந்திர ஒளியை வாங்கி மலரும். இறைவன் சந்திர மண்டலத்தில் வசிக்கிறான் என்பதை இந்த வாக்கியம் மூலம் மிக எளிதாக விளக்கி விடுகிறார்.


வள்ளுவர் தன் முதல் அதிகாரத்தில்,

"மலர் மிசை ஏகினான் மானடி சேர்ந்தார்

நிலமிசை நீடு வாழ்வார்"

என கூறுகிறார்.


இது எந்த மலர் நண்பர்களே? குமுத மலர்

 தான். நண்பர்களே, அண்டத்தில் இப்போது பார்ப்போம்.


இந்த உலகம் உய்வதற்கு மிக முக்கிய கிரகங்கள் சூரியன் மற்றும் சந்திரன். சூரியன் உயிருக்கு ஆதாரமாகவும் சந்திரன் மனதிற்கு ஆதாரமாகவும் உள்ளன. உயிர்கள் தோன்றவும் அவற்றை பராமரிக்க தேவையான வற்றையும்.உருவாக்குவது இவை தான்.


சந்திரன் பெண் அம்சமாக கூறப்படுகிறது. ஏன்?

          பெண்களின் வேறுவேறான பருவ

மாற்றஙகளுக்கு சந்திரனே காரணம். மாதவிடாய் சுழற்சிக்கும் சந்திரனின்

சுழற்சிக்கும் மிக நெருங்கிய தொடர்பு உண்டு.

சாதகத்தில் ராசி சக்கரம் என்ற ஒன்று உண்டு.  ரா என்பது ராகுவையும் சி என்பது சிகி  அல்லது கேதுவையும் குறிக்கும்.

சாதகத்திற்கு குண்டலினி  என்ற பெயர் உண்டு.


நண்பர்களே ராகு, கேது ஆகியவை இரண்டாக  இருந்தாலும் அவை ஒரு பாம்பிலிருந்து உண்டானவை. பாம்பு எங்கிருந்தாலும் அது குண்டலினியை குறிக்கும்.


சரி, ராகு கேது எங்கே உள்ளன? சாதகம் என்ன கூறுகிறது?


சூரியன், சந்திரன் ஆகியவற்றின் பாதைகளின்  ஒரு குறிப்பிட்ட இடத்தில் ஏற்படும் வெட்டு புள்ளிகள் என்கின்றது. நிழல் கிரகஙகள் என்கின்றது. 


சூரியனின்  கரும் புள்ளிகளிலிருந்து வரக்கூடிய அலைகள். ராகு கேது

ஆகியவையே ஆன்மீக முன்னேற்றத்திக்கு

காரணமாகவும்  முக்திக்கு அடிப்படையாகவும் அமைவதாக

சாதகத்தில் கூறப்படுகிறது. ராகு கேது இவை  சூரிய சந்திரனை சார்ந்தே அமைந்துள்ளது.


இட பிங்கலை, சுழுமுனை நாடிகளை ஆசான் மூலம் தெரிந்து கொண்டால் குண்டலினி அல்லது சிற்சபை எதுவென்றும் பிரபஞ்சத்தில்  எங்கோ ஒரு கேள்வி எழுப்பினால் எங்கிருந்தோ ஒரு விடை கிடைத்து விடும் !அந்த விடை  டி.வி. மூலம் வரும் ஒரு விளம்பரமாக கூட இருக்கலாம் உன்னித்து கவனித்தால் விடை வரும் வழி தெரிந்து விடும் ! மனம் தெளிவாகலாம்


சக்தி(பார்வதி) என்பது குண்டலினி (மூலாதாரம்) வழியாக, ஆறு சக்கரங்களையும் கடந்து மேலே சிவத்துடன் கலப்பதே(அர்த்தநாரி) ஞான நிலை. ஜீவாத்மாவானது பரமாத்மாவுடன் கலப்பது(அத்வைதம்). இதையும் சிவலிங்கம் உணர்த்துகிறது.


நாம் உட்கார்ந்து நமது உடலை உற்று நோக்குவோம். நம் இடை சிறுத்துக் குறுகி இருக்கும்.இதனை லிங்கத்தின் அடிப்பீடமாக அமைத்தார்கள்.நம் உந்தியின் கீழ் 2.5 அங்குலத்தில் உட்புறம் இடம் சத்தியலோகம் என்பர்.அங்கு ஒரு பையுள்ளது அது தாமரை மொட்டுப்போல் இருக்கும் அதை தாமரை மலர் என்பர் அதிலிருக்கும் சுக்கிலம் இளமையில் மஞ்சள் நிறமாகவும் வாலிபத்தில் வெண்மை நிறமாகவும் மாறும் இதை மானச தடாகம் என்பர் அதில் ஒர் ஆவி காம உணர்ச்சியை உண்டாக்கி புணர்ச்சியில் சுக்கிலத்தை வெளியேற்றும். 


இதைப் படைத்தல் கர்த்தாவாகிய பிரம்மா என்றனர் உந்தியிலிருந்து ஒருநாடி அங்கு சென்று சேர்வதால் விஷ்ணுவின் உந்தியில் பிரம்மா தோன்றினார் என்றனர் நம் உடலின் இடைக்குமேல் மார்பு அகன்று இருக்கும் இதனை லிங்கத்தின் மேல்பீடமாக அமைத்தார்கள்.


நம் உந்திக்கு மேல் 2.5 அங்குலத்துக்கு உட்புறம் உள்ள இடத்திற்கு வைகுண்டம் என்றனர் அங்கு நாம் உண்ணும் உணவு 2மணி நேரத்தில் ஜீரணித்துப் பால்போல் குழம்பாயிருக்கும் இதைத் திருப்பாற்கடல் என்றனர். 


இதன் மேல் ஆலிலை மாதிரி ஒரு சவ்வு மூடியிருப்பதால் இதனை ஆலிலை என்றனர். இதனுள் ஒருநாடி சுற்றித்தலையைத் தூக்கி கொண்டிருப்பதால் அதனை ஆதிசேஷன் என்றனர். இதன் மேல் ஒரு சீதளநாடி செல்வதை விஷ்ணு என்பார்கள்.இதை தான் ஆதிசேஷன் மேல் விஷ்ணு பள்ளி கொண்டிருக்கின்றார் என்கின்றனர். 


இது நாம் உண்ணும் ஆகாரத்தை சரியான முறையில் சீரணித்து நம் உடலை திடமாகவும் பலமாகவும் வைத்திருக்க உதவுவதால் இதனை காத்தல் கர்த்தா வாகிய விஷ்ணு என்றனர் நம் உடல் மார்புக்குமேல் சிரசு வரையில் கழுத்தும் சிரசும் திரண்டு உருண்டையாக இருக்கும் இதனை குழவிக்கல் ரூபமாய் உருவகித்து லிங்கத்தின் தலையை அமைத்தார்கள்.


நம் நெற்றியில் புருவ நடுவில் உட்புறம் உள்ள இடத்திற்குக் கைலயங்கிரி என்றனர் அங்கு அக்னி நாடி ஆடிக்கொண்டிருப்பதை சிவன் நடனம் ஆடுகிறார் என்றனர்.இங்கு ஆயிரமாயிரம் சிந்தனைகளும் எண்ணங்களும் தோன்றி மறந்து அழிந்து போய் விடுகின்றன இதை அழித்தால் கர்த்தாவாகிய சிவன் என்றனர் லிங்கத்தின் கழுத்தில் 5தலைப்பாம்பு ஒன்று 3சுற்று சுற்றிகொண்டுள்ளது அது லிங்கத்தின் தலைக்குமேல் படம் எடுத்து கொண்டிருக்கிறது நம் உடலில் ஐம்புலன்கள் சிலசமயம் விஷமகுணத்தோடும் அவை செயல்படுவதால் 5தலை பாம்பு என்றனர்.இந்த புலன்களால்தான் பிரிக்க முடியாத பற்று பாசம் சுற்றம் உண்டானது இதனால் தான் பாம்பு லிங்கத்தை விட்டு பிரிக்கமுடியாதபடி மூன்று சுற்று சுற்றிகொண்டுள்ளது,உடலுக்கு சிரசே பிரதானம் அதனால் தான் லிங்கத்தின் தலைக்கு அபிஷேகம் செய்கிறார்கள்.


" சுவாசமது நீண்வருந் தோணி போல் அபானவாய்வு எழுந்தால் மாயாசக்தி நீளும் உதான்னுடைய பார்வையானால் கருவான சுவசலீலையாகுமே உயிர்வாழ்க்கை சுவாசம் என்று கூத்தனார் மனம்கிழந்தரே"


             

No comments:

Post a Comment

Human body secrets

*உங்கள் உடல்... (Thanks to..Vrk Samy) உங்கள் உடல் 37 டிரில்லியன் செல்களை 200 வகைகளாகப் பிரிக்கிறது. 100 பில்லியன் செல்கள் தோலை உருவாக்குக...