ஒன்றும் செய்யாமல் "சும்மாயிரு" என்று சில ஞானிகள் சொல்கிறார்கள்.
சன்மார்க்கத்தில் ஜீவ ஒழுக்கம், பூத ஒழுக்கம், கரண ஒழுக்கம், ஆன்ம ஒழுக்கம் என்றெல்லாம் பல்வேறு ஒழுக்க விதிகளை விதித்து ,வள்ளல் பெருமான் போன்ற மெய்ஞானிகள் அவற்றை செய்யச் சொல்கிறார்கள்.
நாங்கள் எதுவும் செய்யாமல் சும்மா இருக்க வேண்டுமா? அல்லது வள்ளலார் போன்ற விஞ்ஞானிகள் சொல்வதை செய்ய வேண்டுமா? இந்த குழப்பத்தை நீக்கி அருள வேண்டுகிறோம்.
சம்சார துக்க நிவர்த்தி ஆகிய "ஜீவன் முக்தியை" அடைய வேண்டுமானால் எதுவும் செய்யாமல் "சும்மா இருக்க" வேண்டும்.
ஆனால் மரணமில்லாப் பெருவாழ்வை அடைய வேண்டுமானால் ஜீவ ஒழுக்கம், கரண ஒழுக்கம், பூத ஒழுக்கம், ஆன்ம ஒழுக்கம் என்ற ஒழுக்க விதிகளை கடைபிடித்து அசுத்த தேகத்தை, சுத்த தேகம், பிரணவ தேகம், ஞான ஒளி தேகமாக மாற்றம் அடையச் செய்ய வேண்டும்.
இதில் சோம்பேறி தனம் உள்ள சாதகர்கள் ஜீவன் முக்தியை அடைய பாடுபடுகிறார்கள். அவர்கள் வீட்டை . துறந்து துறவியாகி குளிக்காமல், நல்ல உடை உடுத்தாமல், பிச்சை எடுத்து வாழ்ந்து ஜீவன் முக்தியை அடைகிறார்கள். அவர்கள் எதுவும் செய்யக்கூடாது. சும்மா இருக்க வேண்டும். சாப்பாட்டுக்கு கூட பிச்சை எடுத்து தான் சாப்பிட வேண்டும். காசை கையால் தொடக்கூடாது. உணவை மட்டுமே பிச்சை எடுக்க வேண்டும். வேறு ஒன்றையும் யோசிக்கக்கூடாது இதுதான் ஆன்ம ஞானியின் லட்சணம்.
இவ்வாறு வாழ்ந்த பல்வேறு ஞானிகளை நமக்கு தெரியும். சாக்கடை சித்தர், அழுக்கு மூட்டை சித்தர், மூக்குப்பொடி சித்தர், புத்தர், வர்த்தமான மகாவீரர், சேஷாத்ரி சுவாமிகள், பகவான் ரமண மகரிஷி, பகவான் யோகி ராம்சுரத்குமார் போன்ற அனைத்து ஞானிகளும் ஆன்ம ஞானிகளே. அதாவது ஜீவன் முக்தர்கள். இவர்களிடம் மேற்குறிப்பிடப்பட்ட ஜீவன் முக்த லட்சணம் பரிபூரணமாக விளங்கியதை நாம் காணலாம்.
இவர்கள் நம் ஒவ்வொருவரிடமும் உள்ள பஞ்சகோசங்களில் அதாவது அன்னமய கோசம், மனோமய கோசம், பிராணமய கோசம், விஞ்ஞானமய கோசம், ஆனந்தமய கோசம் என்ற ஐந்து உடல்களில் விஞ்ஞானமய கோசம் மற்றும் மனோமய கோசத்தை மட்டுமே கையாண்டார்கள்.
மீதமுள்ள அன்னமய கோசம், பிராணமய கோசம், ஆனந்தமய கோசம் இதைப்பற்றி எல்லாம் அவர்களுக்கு கவலையே இல்லை. அவர்களுடைய ஸ்தூல உடலாகிய அன்னமய கோசத்தில் கேன்சர் வந்தாலும் எது வந்தாலும் அதைப்பற்றி அவர்கள் சட்டை செய்வதில்லை. இதுவே "சும்மாயிரு" என்பதின் அர்த்தம்.
ஆனால் மெய்ஞானம் அல்லது சைவ சன்மார்க்கம் என்று வரும் பொழுது இந்த உடலை அனுதினமும் நன்றாக குளித்து, நல்ல உடை உடுத்தி சுத்தமாக பராமரித்து, பற்பம், செந்தூரம் உட்கொண்டு இந்த சும்மா போன் ஆகிய உடலை ஸ்மார்ட் போனாக மாற்ற வேண்டிய அவசியம் ஏற்படுகிறது.
வள்ளலார், சைவ சமய நால்வர் பெருமக்கள், பதினெண் சித்தர் பெருமக்கள், சப்தரிஷிகள் மற்றுமுள்ள அனேக தசகாரிய வாசி யோகிகள் போன்ற மெய்ஞானிகள் அன்னமய கோசம், மனோமய கோசம், பிராணமய கோசம், விஞ்ஞானமய கோசம், ஆனந்தமய கோசம் என்ற அனைத்து உடல்களையும் வலுப்படுத்த பயிற்சி செய்கிறார்கள்.
இவர்கள் இல்லறத்தில் இருந்து கொண்டே ஒழுக்கம் தவறாமல் அனுதினமும் நன்றாக குளித்து, நல்ல உடை உடுத்தி, ஆலய வழிபாட்டை செய்து, மனைவி மக்கள் குழந்தை சுற்றங்களையும் பாதுகாத்துக் கொண்டு, தான் சார்ந்த சமூகத்தையும், நாட்டையும் பாதுகாத்து கொண்டு உயர்ந்த உன்னதமான வாழ்க்கையை வாழ்ந்தார்கள். எனவேதான் அவர்களுக்கு யாரும் பெறாத நிலையாகிய நூற்றுக்கு நூறு மார்க் என்ற மரணமில்லாப் பெருவாழ்வை இறைவன் அளித்தார்.
அதாவது வள்ளலார், சைவ சமய நால்வர் பெருமக்கள், அகத்தியர் போன்ற சித்தர் பெருமக்களை யாரும் விஷ ஊசி போட்டு சாகடிக்க முடியாது அல்லது தண்டனை கொடுத்து சித்திரவதை செய்ய இயலாது.
ஆனால் பகவான் ஓஷோ, இயேசு நாகர் போன்ற மேலும் பல ஆன்ம ஞானிகளை சாதாரண மக்கள் மற்றும் ஆட்சியாளர்கள் விஷ ஊசி போட்டு கொன்றதும், சிலுவையில் அறைந்து கொன்றதும் வரலாற்றில் பதிவாகி உள்ளது.
இவ்வாறு ஆன்ம ஞானிகளுக்கும் மெய்ஞ்ஞானிகளுக்கும் உள்ள வித்தியாசம் ஆன்மீக ஆர்வம் உள்ள பொதுமக்களுக்கு புரியாததால் தான் இன்று ஆன்மீகத்தில் பல்வேறு குழப்பவாதிகள் மற்றும் போலி குருமார்கள் நான் முற்றும் துறந்த முனிவன் என்றெல்லாம் வேஷம் போட்டு ஊரை ஏமாற்றிக் கொண்டு திரிகிறார்கள்.
எனவே வீட்டைவிட்டு ஓடிப்போய் துறவியாகி சும்மா இருக்கிறேன் பேர்வழி என்று குளிக்காமல், நல்ல உடை உடுத்தாமல், துன்பப்பட்டு, துக்கப்பட்டு கஷ்டப்பட்டு நோய் வந்து அல்லது சிலுவையில் அறையப்பட்டு பிச்சைக்காரனாக சாவதைவிட, வீட்டில் இருந்துகொண்டே ஒழுக்க விதிகளை பின்பற்றி யாரும் பெறாத நிலையாகிய மரணமில்லாப் பெருவாழ்வை அடைய வழிகாட்டும் சைவ சன்மார்க்க சாதனங்களே உயர்ந்த நிலை என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
ஆன்மீகத்தில் போலிகள் ஒழிந்து சைவமும், சன்மார்க்கமும் வளர வேண்டுமானால் ஆன்ம ஞானிகளுக்கும் வள்ளலார் போன்ற மெய்ஞானிகளுக்கும் உள்ள இந்த வித்தியாசத்தை பொது மக்களுக்கு புரிய வைக்க வேண்டும்.
தன் உடலை பராமரிக்க தெரியாத, ஒரு குடும்பத்தை நடத்தத் தெரியாத, மனைவியை சந்தோஷப்படுத்த தெரியாத ஆண்மையற்ற முட்டாள்கள் ஆன்மீகம் என்ற பெயரில் நடிப்பதை தடுக்க வேண்டுமானால், பொதுமக்களின் அன்றாட வாழ்வில் ஆன்மீகம் என்ற பெயரில் குழப்பத்தை ஏற்படுத்துவதை தடுக்க வேண்டுமானால் இந்த புரிதல் பொதுமக்களுக்கு அவசியம் ஏற்பட வேண்டும்.
எனவே உண்மை ஆன்மீகம் என்பது சைவ சன்மார்க்கம் காட்டும் தசகாரிய வாசி யோகப் பயிற்சிகளை முறையாகச் செய்து, சாகா கல்வி கற்று எந்த ஒரு சிரமமும் இல்லாமல் வீட்டில் இருந்துகொண்டே பற்றறுத்து வாழ்ந்து பரமுத்தி என்னும் நம் உடலாகிய கருவியை நீங்களே அசெம்பிள் செய்யவும் தேவையற்ற போது பஞ்சபூதங்களில் பிரித்து போடவும் செய்யக்கூடிய தன்மையை அடைவதே ஆகும். எனவே நீங்கள் அனைவரும் சைவ சன்மார்க்க பாதையில் தசகாரிய வாசி யோக பயிற்சிகளை மேற்கொண்டு மரணமில்லாப் பெருவாழ்வை அடைய முயல வேண்டுமாய் அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.
"கொடுவா பிடி பிடித்தால் தான் அருவா பிடியாவது தேறும்" என்ற தமிழ் பழமொழிக்கு ஏற்ப நாம் ஜீவ ஒழுக்கம், கரண ஒழுக்கம், பூத ஒழுக்கம், ஆன்ம ஒழுக்கம் போன்ற முறையான ஒழுக்கங்களை கைக்கொள்ளும் போது மட்டுமே ஜீவன்முக்தி என்ற நிலையாவது நமக்கு கிடைக்கும் என்பதை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும்.
செத்துப் போனவர்களையே வணங்கிக் கொண்டிருக்கும் தமிழா!!!
இனியாவது சாகாதவர்களை வணங்க கற்றுக்கொள்!!!
தமிழனின் கலை சாகாக் கலையே!!!
சைவ சன்மார்க்க நெறி நின்றார் நீடுவாழ்வார், மற்றையார் வெந்து சாவார்!!!
மேன்மைகொள் சைவ சன்மார்க நெறி விளங்குக உலகமெல்லாம்!
கொல்லா நெறியே குவலயம் எல்லாம் ஓங்குக!!!
அருட்பெருஞ்ஜோதி! அருட்பெருஞ்ஜோதி! தனிப்பெருங்கருணை!அருட்பெருஞ்ஜோதி!.
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க!. வள்ளல் மலரடி வாழ்க வாழ்க! .
ஓம் நமசிவாய !!! திருச்சிற்றம்பலம்!!!
No comments:
Post a Comment