Aadhi Shiva Guru Spark Yoga 🧘♀️
பேசாப் பொருள் எனும்
பிரம்ம ரகசியம்
காயத்ரி மந்திரம்//மறுபிறப்பு // இருபிறப்பாளன்// த்விஜன் // வேதியன் // பிராமணன்- அந்தணன்.
---------------------------------------
சமய வாழ்வில் மந்திர உச்சாடனம்- ஜெபம் செய்வதென்பது முக்கிய பங்கு வகிக்கிறது அல்லவா!
சைவர்களுக்கு "நமசிவாய- சிவாயநம "எனும் பஞ்ஞாட்சர மந்திரமும், வைணவர்களுக்கு" ஓம் நமோ நாராயணாய "எனும் அஷ்டாக்ஷர மந்திரமும் உள்ளதைப் போன்று, இந்துமதம் எனும் வேதாந்த தரும வழி வந்த பிராமணர்களுக்கான மூல மந்திரமாக காயத்ரி மந்திரம் விளங்கி வருகிறது.
மூல மந்திரம் என்பதன் பொருள் என்ன?
மூலம் எனில் முதற் காரணமாகிய மெய்-அகர முதல்- சுத்த தேகமாகிய அழியாத பிரணவ தேகம்-பெருவெளி- சிற்சபை.
மந்திரம் எனில் இருப்பிடம்- இல்லம்- வீடு.
மந்திர்- கோயில் -வீடு.
நம்முள்ளே இருக்கும் நித்திய தேகமாகிய பிரணவ தேகமே, இறைவன் குடியிருக்கும் கோயில்- அதுவேமூல மந்திரம்.
காயத்ரி மந்திரத்திற்கு ஈடான மந்திரம் வேறு எதுவும் இல்லை என்கிறது சாஸ்திரங்கள்.
"ஓம் பூர் புவ ஸ்வ
தத் ஸவிதுர் வரேண்யம்
பர்கோ தேவஸ்ய தீமஹி
தியோ யோந: ப்ரசோதயாத்||"
மந்திரப் பொருள்:
"ஓங்காரப் பொருளான எந்த பரமாத்மா நம்முடைய புத்தி சக்திகளைத் தூண்டுகிறாரோ, அந்த அனைத்தும் படைக்கிறவரான பகவானுடைய சிறந்த ஜோதி ஸ்வரூபத்தை தியானிப்போம்."
இந்த மந்திரத்தை தினமும் காலை மாலை வேளைகளில் சதாகாலமும் ஓதுவதால், அப்படி ஓதிக் கொண்டிருப்பவர்களுக்கு அந்த காயத்ரி தேவி எப்போதாவது தரிசனத்திற்கு வந்ததா?
காயத்ரி என்னப் பெற்றது எழுத்தா- மந்திரமா அல்லது ரூபியா?
காயத்ரி தேவி என்பவள் யார்?
"காயத்ரி தேவி ப்ரஹ்ம ரூபிணி."
நம் தேகமாகிய காயத்தினுள்ளே - நம் தேகாலயத்தினுள்ளே புனற்றுறைக் கோயிலாக விளங்கும் இதயாசனத்தில்
கோடி சூரியப் பிரகாச ரூபமாய் நின்று கமழுகின்ற, என்றும் பத்து வயது கன்னியாக அல்லவா, அந்த காயத்ரி தேவி வீற்றிருக்கிறாள்.
நம்முடைய உயிராக -ஜீவனாக-ஆன்மாவாக அல்லவா அவள் விளங்குகின்றாள்.
" கன்னி நின்ற இடங் கண்டால் அவனே ஞானி" என்கிறார் சட்டைமுனி நாயனார்.
அந்த பத்து வயதான கன்னியை- காயத்துள்ளே நின்று ஒளிரும் ஸ்தீரியை குரு முகமாக உபதேசம் பெற்று தரிசனம் செய்யும் பிரம்ம வித்தையே உபநயனம்- பிரம்மோபதேசம் எனும் ஸம்ஸ்காரமாகும்.
அப்படி காயத்ரி தேவியைத் தன் இதயாசனத்தில் சந்தித்து வணங்கும் வந்தனமே சந்தியா வந்தனம் ஆகும்.
பெற்றோர் தந்த இந்த சரீர ஜன்மம் கடந்து ஒரு சற்குருபிரான் முகத்தில் மறுபிறப்புப் பெற்று-த்விஜன்- ஆன்மாவின் ஜனனம் எடுத்த போது- பிரம்மத்தை அறிந்த பிராமணன் ஆகிறான்.
தம்முடைய சூக்கும தேகத்தில் பிரம்ம முடியுடன் கூடிய- பூப்போன்ற பிரகாச மான முப்புரி - அறுபுரி நூலைக் கண்டு - நிஜமாகவே பிராமணர் ஆனதற்கான அடையாளமாக பூணூலை குரு பிரான் அணிவிக்க தரித்து கொள்கின்றார்.
"யஜ்ஞோபவீதம் பரமம் பவித்ரம் ப்ரஜாபதோ
யத் ஸஹஜம் புரஸ்தாத்| ஆயுஷ்ய-மக்ர்யம்
ப்ரதிமுஞ்ச சுப்ப்ரம் யஜ்ஞோபவீதம் பலமஸ்து தேஜ:||"
என்கிறது பிரம்மோபநிஷத்து.
" பரிசுத்தியளிக்கக் கூடியவற்றுள் சிறந்ததும், ஆதியில் பிரம்மா தோன்றும்போதே அவருடன் தோன்றியதும், ஆயுளையும் முதன்மையையும் அளிக்க வல்லதுமாகிய வெண்மையான ( சுப்ர) பூணூலைத் தரிக்கிறேன்.ஞான ஒளியும், பலமும் அதனால் நிலைபெற வேண்டும்."
🔥பெண்ணின் கால்வழியே பிறந்தோர் அனைவருமே சூத்திரர்கள் தாம்.
ஆம்! பிறப்பால் அனைவருமே சூத்திரர்கள் தாம்.
இந்த மானிட ஜென்மம் பெற்று, தமது செயல்பாட்டினால் ஒருவன், மெய்குருபிரான் திருவருளால் மறுபிறப்பு - புனல் ஜென்மம்-பெற்றபின்னர் இருபிறப்பாளன்- த்விஜன் ஆகின்றான்.
வேதம் அறிந்த வேதியன் ஆகின்றான்.
பிரம்ம ஞானம் பெற்ற பிராமணன்- அந்தணன் ஆகின்றான்.
" ஜன்மனா ஜாயதே சூத்ரஹ|
கர்மணா ஜாயதே துவிஜஹ|
வேத முக்யஸ்து விப்ராணாம்|
பிரம்ம ஞானம்து பிராம்மணாம்||
இந்த யுகத்தில் உண்ணும் உணவில் வைத்து சைவர்- அசைவர் பாகுபாடு வந்ததைப் போன்று, அணிந்துள்ள பஞ்சு நூலாலான பூணூலைக் கொண்டு பிராமணர்- பிராமணர் அல்லாதோர் என பேதம் காண்கிறோம்.
🔥ஆனால் உண்மையில் வேதங்கள் -உபநிடதங்கள்- ஸ்மிருதிகள் -புராணங்கள்- இதிகாசங்கள் இவை வகுத்த நெறிமுறை என்ன என்பதை ஆராய்ந்து பார்த்தால் இவையாவும் வெறும் புறத்தோற்றமே என்பது புலனாகும்.
SPARK TRUST 💥 Together we can make Enligtend, Enriched and Hunger Free world 🌎
No comments:
Post a Comment