கோத்திரம் என்றால் என்ன?
கோத்திரம் (Gotram)
கோத்திரம் என்றால் என்ன?
அகராதியில் இந்தச் சொல்லுக்கு வம்சம் என்று பொருள் கூறப்பட்டுள்ளது. இந்த வம்சத்தைச் சார்ந்தவர் என்பதைச் சொல்லுவதுதான் கோத்திரம். இந்தக் கோத்திரங்களின் முக்கியமானவர்களாக ஏழு ரிஷிகள் கூறப்பட்டுள்ளனர். இவர்களைக் கோத்திர பிரவர்த்தகர்கள் என்று சொல்லுவர்.
இந்த ரிஷிகளின் பெயர்கள் பின்வருமாறு
1. பிருகு 2. அங்க்ரஸர் 3. அத்ரி 4. விச்வாமித்ரர் 5. வஸிஷ்டர் 6. கச்யபர்
7. அகஸ்த்யர்
கோத்திரம் அறிந்து பெண்ணைக் கொடு
பெண்கள் உந்நதமான நிலையில் இருக்க வேண்டியவர்கள். பெண் திருமணம் ஆகிக் கணவன் வீடு வருவதையும், அவளுக்குக் கணவனின் கோத்திரமே தான் கோத்திரமாக மாறுகிறது என்பதையும் அறிவோம். ஆகவே பெண் என்ன மட்டமானவளா, ஆண் என்ன உசத்தி என்றெல்லாம் கேட்பதோடு ஆண் குழந்தை பிறந்தால் தான் வம்ச வ்ருத்தி எனச் சொல்வதையும் தவறாகவே புரிந்து கொள்கிறோம். பெண்ணில்லாமல் கருவைச் சுமக்க யாரும் இல்லை. ஆகவே பெண் வேண்டாம் என யாருமே சொல்வதில்லை.
விஞ்ஞான ரீதியிலேயே இதற்கான பதிலைக் காண்போமா.
விஞ்ஞான முறையில் யோசித்தால் ஒரு குழந்தை ஆணா, பெண்ணா என்பதை முடிவு செய்வது ஆணே. ஒவ்வொரு குழந்தைக்கும் 23+23 க்ரொமொசோம்கள் உள்ளன என்பதை அறிவோம். இது தாய் மூலம் 23 தந்தை மூலம் 23 என்பதையும் அறிவோம். இதிலே பிறக்கப் போகும் குழந்தை ஆணா, பெண்ணா என்பதைத் தந்தையின் க்ரொமொசொமே முடிவு செய்கிறது. தாயிடம் xx க்ரோமோசோம்கள் மட்டுமே இருக்கின்றன. தந்தைக்கோ, xy என இருவிதமான மாறுபட்ட க்ரோமோசோம்கள் உள்ளன. ஆணின் y யுடன் பெண்ணின் x சேர்ந்தால் ஆண் குழந்தையும் இருவரின் x+x சேர்ந்தால் பெண் குழந்தையும் பிறக்கின்றது என்பதை விஞ்ஞானம் அறுதியிட்டுக் கூறி உள்ளது.
ஒரே கோத்திரத்தில் திருமணம் செய்யக் கூடாது என்பதன் காரணமும் இதை ஒட்டியே. ஒரே கோத்திரத்தில் பிறந்த பெண்ணோ, ஆணோ ஒருவரை ஒருவர் அறியாதவர்களாகவே இருந்தாலும் அவர்கள் சகோதர, சகோதரியாகவே கருதப் படுகிறார்கள் என்பதை நம் சனாதன தர்மம் திட்டவட்டமாய்க் கூறும். ஏனெனில் பெண் குழந்தையை உருவாக்கும் x க்ரோமோசோம் இருவரிடமும் இருக்கையில் ஆண் குழந்தையை உருவாக்கும் y க்ரோமோசோம் மட்டும் ஆணிடம் தான் உள்ளது. பெண்ணிற்கு y க்ரோமோசோம்கள் தந்தை வழி வருவதில்லை. ஆனால் அதே ஆண் குழந்தைக்குத் தந்தையிடம் இருந்து y க்ரோமோசோம்கள் வருகின்றன. ஏனெனில் அவன் மூலம் தான் வம்சம் மீண்டும் வளரப் போகின்றது வழி வழியாக.
வழிவழியாக என்பதில் இருந்தே புரிந்திருக்க வேண்டுமே, முப்பாட்டனார், பாட்டனார், மகன், பேரன், கொள்ளுப் பேரன், எள்ளுப் பேரன் எனத் தொடர்ந்து இது ஒவ்வொருவரிடமும் விதைக்கப்பட்டுத் தொடர்ந்து காப்பாற்றப் பட்டு வருகின்றது. இதன் முக்கியத்துவம் குறித்து அறிந்தே நம் முன்னோர்கள் ஆண் குழந்தைகளுக்கு முக்கியத்துவம் அளித்திருக்கின்றனர்.
இதே முப்பாட்டி, பாட்டி, மகள், பேத்தி, கொள்ளுப்பேத்தி, எள்ளுப்பேத்தி என x க்ரோமோசோம்கள் வழி வழியாக வருவதில்லை. தன் தாயிடம் இருந்தும், தந்தையிடம் இருந்தும் x க்ரோமோசோம்கள் மகளுக்குக் கிடைக்கின்றது. ஆனால் இயற்கையின் மாபெரும் அதிசயமாக y க்ரோமோசோம்கள் பெண்களுக்குக் கடத்தப்படுவதில்லை என்பதோடு தந்தையிடம் இருந்து மகன் பெறுவதும் அவன் பரம்பரையின் y க்ரோமோசொம்கள் மட்டுமே.
ஒரு ஆணால் மட்டுமே இந்த y க்ரோமோசோம்களைத் தன் மகனுக்கு அளிக்க முடிகிறது. பெண்ணிற்கோ எனில் ஆணின் y க்ரோமோசோம்கள் கிடைப்பதில்லை. பெண் எப்போதும் பெண்; 100% பெண். ஆனால் ஆணோ 50% பெண் எனலாம். இதிலே வேடிக்கை என்னவெனில் ஆணின் y க்ரோமோசோம்கள் ரொம்பவே பலவீனமான ஒன்று. ஆனால் அதிலே உருவாகும் ஆண் பெண்ணை அடக்கி ஆள்கிறான் என்பதும் விந்தையிலும் விந்தை. மேலும் தொடர்ந்து காலம் காலமாக இந்த y க்ரோமோசோம்கள் அவரவர் பரம்பரை ஆண் மக்களுக்குச் சென்று கொண்டிருப்பதால் இன்னமும் பலவீனம் ஆகிக் கொண்டிருக்கிறதாம். ஆகவே தான் ஏற்கெனவே பலவீனமான y க்ரோமோசோம்கள் மேலும் பலவீனம் அடைய கூடாது என்பதாலும், பரம்பரை நோய்கள் தொடரக் கூடாது என்பதாலுமே சொந்த ரத்த உறவுகளுக்கிடையே திருமணம் தவிர்க்கப் படுகிறது.
No comments:
Post a Comment